ஜார்கண்டில் வீடு புகுந்த புலியை பாதுகாப்பாக மீட்க உதவிய தந்தைக்கும் மகளுக்கும் விருது!

தங்களது வீட்டிற்குள் நுழைந்த புலியை பாதுகாப்பாக மீட்க வனத்துறைக்கு உதவிய நபர் மற்றும் அவரது மகளை ஜார்கண்ட் வனத்துறை பாராட்டி, பரிசுத்தொகை வழங்கியுள்ளது.

முரி போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ள மர்து கிராமத்தைச் சேர்ந்த புரந்தர் மஹ்தோவின் வீட்டில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் ஒரு ஆண் புலி நுழைந்தது. இச்சம்பவம் நடந்ததும் மஹ்தோவின் மகள் சோனிகா குமாரி மற்றும் மற்றொரு பெண் எச்சரிக்கையுடன் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர், மஹ்தோ தன் மகளுடன் சேர்ந்து வீட்டின் வெளியே இருந்து கதவை பூட்டி புலியை உள்ளே அடைத்தார்.

பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே பலமூ புலி காப்பகத்திலிருந்து வந்த மீட்புக் குழுவினர் புலியை பாதுகாப்பாக பிடித்து கூண்டில் அடைத்தனர். அதற்குப் பிறகு அந்தப் புலி வனப்பகுதிக்குள் மீண்டும் விட்டுவிடப்பட்டது.

இதையடுத்து, ராஞ்சியில் நடைபெற்ற 76-வது வனமஹோத்சவ விழாவில், வன பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டில் மஹ்தோவும், 10ஆம் வகுப்பு படிக்கும் அவரது மகள் சோனிகா குமாரியும் செய்த ஒத்துழைப்புக்காக ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள காசோலை வழங்கப்பட்டது. கூடுதலாக, வன பாதுகாப்புக்காக அவர்கள் செய்த சேவையை நினைவுகூர்ந்து ரூ.21,000 தொகையும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தலைவர் ரவீந்திர நாத் மஹ்தோ மற்றும் அமைச்சர் ராதாகிருஷ்ண கிஷோர் ஆகியோர் காசோலைகளை வழங்கினர். பின்னர் பேசிய அமைச்சர் கிஷோர், தற்போது ஜார்கண்டில் சுமார் 30 சதவீதம் மட்டுமே வனப்பகுதி இருப்பதாகவும், 1960–70 காலப்பகுதியில் இது 45 முதல் 55 சதவீதம் வரை இருந்ததாகவும் தெரிவித்தார்.

Facebook Comments Box