பட்டியலின மக்களை அவதூறாகப் பேசிய வழக்கு: நடிகை மீரா மிதுனை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக கருத்து வெளியிட்டதாகும் வழக்கில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மூன்று ஆண்டுகளாக மறைவில் உள்ள நடிகை மீரா மிதுனை கைது செய்து, ஆகஸ்ட் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

பட்டியலின மக்களை பற்றி அவமதிப்பான வகையில் பேசி, அதற்கான வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோருக்கு எதிராக, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ், 2021-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்திருந்தனர்.

பின்னர், இருவரும் ஜாமீனில் வெளியேறிய நிலையில், மீரா மிதுன் தொடர்ந்து நீதிமன்ற விசாரணைகளுக்கு ஆஜராகாததால், 2022 ஆகஸ்ட் மாதத்தில் அவரது மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவரை கைது செய்ய தனி போலீஸ் படையும் அமைக்கப்பட்டது.

எனினும், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதிலிருந்து மூன்றாண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த மீரா மிதுனை காவல் துறையினர் கண்டுபிடிக்க முடியாத நிலை நீடித்தது. இதையடுத்து, வாரண்டை செயல்படுத்தாத காவல்துறையின் நடவடிக்கையின்பால் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

இந்த சூழலில், டெல்லி நகரில் வீதிகளில் சுற்றிக்கொண்டு இருக்கிறார் எனத் தெரிவித்து, மீரா மிதுனை மீட்கக் கோரி அவரது தாயின் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அதில், நீதிமன்ற உத்தரவின் பேரில், சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழியாக டெல்லி சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அதன் பேரில் டெல்லி போலீஸார் மீரா மிதுனை பிடித்து அங்குள்ள அரசு காப்பகத்தில் வைத்துள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி, டெல்லி காப்பகத்தில் உள்ள மீரா மிதுனை கைது செய்து, ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன் பிறகு விசாரணையை ஒத்திவைத்தார்.

Facebook Comments Box