நடிகை ரம்யாவுக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் பிடிபட்டனர்: பெங்களூரு போலீஸார் நடவடிக்கை
முன்னாள் எம்பி மற்றும் நடிகை ரம்யாவுக்கு சமூக வலைதளங்களில் ஆபாச செய்திகள் மற்றும் பாலியல் மிரட்டல்கள் அனுப்பியதாக 4 பேர் நேற்று பெங்களூரு போலீசால் கைது செய்யப்பட்டனர். மேலும் 10-க்கும் அதிகமானவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கன்னட நடிகர் தர்ஷன், தனது காதலி பவித்ரா கவுடாவுக்கு ஆபாச செய்தி அனுப்பிய ரேணுகா சாமி என்ற ரசிகரை தாக்கி கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கர்நாடக உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ரம்யா சமூக வலைதளங்களில், ‘‘ரேணுகா சாமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்’’ என பதிவிட்டார். இதனால் கோபமடைந்த தர்ஷனின் ரசிகர்கள், ரம்யாவை சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகளால் தாக்கியது மட்டுமன்றி, பலாத்கார மிரட்டல்களையும் விடுத்தனர்.
இதைப் பற்றிய புகாரை நடிகை ரம்யா நேரடியாக பெங்களூரு மாநகர காவல் ஆணையரிடம் அளித்தார். அதன்பேரில், ஆணையர் சீமந்த் குமார் சிங் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
தர்ஷனின் ரசிகர்கள் பயன்படுத்திய இன்ஸ்டாகிராம் கணக்குகளைத் தொடர்ந்து கண்காணித்து, பவன் கவுடா, ராஜேஷ், கங்காதரா, ஒப்பன்னா ஆகிய நால்வரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதுபற்றி பேசிய காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங், “முன்னாள் எம்பி ரம்யாவுக்கு மிரட்டல் விடுத்த நால்வரை கைது செய்துள்ளோம். மேலும் 11 பேரின் அடையாளம் மற்றும் இருப்பிடம் நமக்குத் தெரிந்துள்ளது. அவர்களையும் விரைவில் கைது செய்வோம்,” என்றார்.