இருக்கன்குடி கோயிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்றம் இன்று காலை மிகுந்த சிறப்புடன் நடந்தது.
ஆண்டு தோறும் நடைபெறும் இந்த திருவிழாவைக் காண, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். குறிப்பாக, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரையாக வந்து அம்மனை தரிசித்து, அக்கினிச் சட்டி, ஆயிரம் கண் பானை, மா விளக்கு, பறக்கும் காவடி, தேர் இழுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்துவர்.
இந்த ஆண்டின் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா வரும் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தொடக்கமாக, இன்று காலை கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக செப்புக் கொடி மரத்திற்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, செயல் அலுவலர் சுரேஷ், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பக்தர்களின் வசதிக்காக குடிநீர், நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, தங்கும் இடங்கள், தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, மருத்துவ மையம், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.
இதற்கிடையில், தமிழகத்தின் அனைத்து கோயில்களிலும் ‘முதல் மரியாதை’ வழங்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு காரணமாக, இருக்கன்குடி ஊர்த் தலைவருக்கு மரியாதை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால், ஊர் பொதுமக்கள் கடைகளை மூடி, கோயில் புறக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, கோயில் பரம்பரை அறங்காவலரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.