புச்சி பாபு கிரிக்கெட் போட்டி: டிஎன்சிஏ அணிகள் சாதனை

ஆல் இந்தியா புச்சி பாபு கிரிக்கெட் தொடர்ச்சி தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்ற டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் அணி – இமாச்சல் பிரதேச அணி இடையேயான ஆட்டம் செங்குன்றத்தில் உள்ள கோஜன் ‘ஏ’ மைதானத்தில் நடந்தது.

முதல் இன்னிங்ஸில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 274 ரன்களும், இமாச்சல் பிரதேசம் 214 ரன்களும் பெற்றன.

60 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் அணி, இறுதி நாள் ஆட்டத்தில் 45 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் சேர்த்தது. இதில் விமல் குமார் 105, ராதாகிருஷ்ணன் 59 ரன்கள் எடுத்தனர். 307 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இமாச்சல் அணி 26.1 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

டிஎன்சிஏ சார்பில் வித்யுத் 4 விக்கெட்களையும், அச்யுத் 3 விக்கெட்களையும் பெற்றனர். ஆட்ட நாயகன் பட்டத்தை அச்யுத் கைப்பற்றினார். 196 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் முழுமையாக 6 புள்ளிகளை குவித்தது.

குருநானக் கல்லூரி மைதானத்தில் சத்தீஷ்கர் – மகாராஷ்டிரா அணிகள் மோதின. சத்தீஷ்கர் முதல் இன்னிங்ஸில் 252, மகாராஷ்டிரா 217 ரன்கள் எடுத்தன. 35 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸில் விளையாடிய சத்தீஷ்கர் அணி 43.3 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

184 ரன்கள் இலக்குடன் விளையாடிய மகாராஷ்டிரா அணி 43.5 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 35 ரன்கள் வித்தியாசத்தில் சத்தீஷ்கர் அணி வெற்றி பெற்று 6 புள்ளிகளைப் பெற்றது.

பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் இந்தியன் ரயில்வே அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜம்மு & காஷ்மீர் அணி தோற்கடித்தது.

பிசிடி-ஐபி மைதானத்தில் ஒடிசா அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பரோடா அணி.

கோஜன் ‘பி’ மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டிஎன்சிஏ லெவன் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்தது. 266 ரன்கள் இலக்குடன் விளையாடிய டிஎன்சிஏ லெவன் அணி 44.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சச்சின் 115, ஆதிஷ் 57 ரன்கள் விளாசினர்.

Facebook Comments Box