திருஞானசம்பந்தரை நேசித்த ‘பூம்பாவை’ – 1944-ம் ஆண்டு வெளியான படம்

சேலத்தில் டி.ஆர். சுந்தரம் 1937-ல் தொடங்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார் நடிகையும் பாடகியுமான யு.ஆர். ஜீவரத்தினம். அவருடைய திறமையை கவனித்த டி.ஆர். சுந்தரம், தனது முதல் படமான சதி அகல்யா (1937) மூலம் அவரை அறிமுகப்படுத்தினார். பின்னர் சந்தான தேவன் (1937), பக்த கவுரி (1941) ஆகிய படங்களில் நடிக்க வைத்தார். அவர் பாடிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றதால், புகழும் உயர்ந்தது. அடுத்ததாக அவர் முதன்மை வேடத்தில் நடித்த முக்கியமான படம் பூம்பாவை.

இந்தக் கதையின் மையமாக, அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரை பூம்பாவை காதலித்தார் என்ற நாட்டுப்புறக் கதை அமைந்தது.

கதைச்சுருக்கம்

மயிலாப்பூரில் சிவபக்தரான சிவநேசனுக்கு பூம்பாவை என்ற தெய்வீகக் குழந்தை பிறக்கிறாள். சிவனடியார்களுக்கு அன்புகொடுத்து வளர்கிறாள். ஆனால் அவளது மாற்றாந்தாய் பொன்னம்மாள், தனது மகன் ஏலேலசிங்கனுடன் பூம்பாவையைத் திருமணம் செய்ய நினைக்கிறாள். அதனை சிவநேசன் மறுக்கிறார்.

சிவபெருமான் அடியார் வேடத்தில் வந்து யாசகம் கேட்க, பூம்பாவை மாணிக்கக் கல் ஒன்றைத் தானமாக அளிக்கிறாள். அதை மயிலாப்பூர் அரசன் கிரீடத்தில் பதிக்க வேண்டும் எனக் கேட்க, சிவநேசன் “இது அன்பின் அடையாளம், விற்கப்படாதது” என்று மறுக்கிறார். இதனால் அவர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்படுகிறது.

சோழநாட்டுக்குச் செல்லும் சிவநேசன், அங்கு திருஞானசம்பந்தரின் அற்புதச் செயல்களை கண்டு வியக்கிறார். அப்பொழுது பூம்பாவை சம்பந்தரிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறாள். ஆனால் சம்பந்தர் அவளுக்கு உலக ஆசைகளை விட்டுவிட்டு தெய்வீக அறிவை நாட வேண்டும் என அறிவுறுத்துகிறார். பின்னர் பாம்பு கடித்துப் பரிதாபமாக இறந்த பூம்பாவையை, சம்பந்தர் உயிர்த்தெழச் செய்கிறார். உயிர் கொடுத்தவர் தந்தையைப் போன்றவர் என்பதால் திருமணத்திற்கு பதிலாக அவளுக்கு ஆன்மீக அறிவை அளிக்கிறார்.

தயாரிப்பு

கதை கம்பதாசன் எழுதியது; வசனம் சோமையாஜுலு. இயக்கம் அதிகாரபூர்வமாக பாலாஜி சிங் பெயரில் இருந்தாலும், உண்மையில் கிருஷ்ணன் – பஞ்சு இயக்கியதாகக் கூறப்படுகிறது. ஒளிப்பதிவு புருஷோத்தம், இசை அட்டேபள்ளி ராமராவ். காலம் வீண் போகுதே, ஓம் நமச்சிவாயா போன்ற பாடல்கள் பிரபலமானவை.

நடிகர்கள்

  • யு.ஆர். ஜீவரத்தினம் – பூம்பாவை
  • கே.ஆர். ராமசாமி – திருஞானசம்பந்தர்
  • கே. சாரங்கபாணி – சிவநேசன்
  • டி.ஆர். ராமச்சந்திரன் – ஏலேலசிங்கன்
  • கே.ஆர். செல்லம் – பொன்னம்மாள்

    மேலும் ஏ.ஆர். சகுந்தலா, எஸ்.வி. சஹஸ்ரநாமம், என்.எஸ். கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

வெளியீடு

கீழ்ப்பாக்கம் நியூடோன் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட இந்த படம் 1944 ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதலில் சில திரையரங்குகளில் வெளியானது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, ஒரு வாரத்துக்குப் பிறகு அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.

Facebook Comments Box