ஆகஸ்ட் 19 முதல் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி (நாளை) முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்ட அறிக்கையில், மத்திய மேற்கு மற்றும் வட மேற்கு வங்கக்கடல், வட ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு, நாளை (ஆக.19) காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆக வலுப்பெற்று தெற்கு ஒடிசா – வட ஆந்திரா கடலோரப்பகுதிகளைத் தாண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தென்னிந்தியாவுக்கு மேலாக வளிமண்டல சுழற்சி நிலவும் நிலையில், மத்திய கிழக்கு – தென் கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால், தமிழகத்தில் நாளை சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீச வாய்ப்பு உள்ளது.
- ஆகஸ்ட் 20, 21: சில இடங்களில் மழை
- ஆகஸ்ட் 22, 23: பல இடங்களில் மழை
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.
தமிழக கடலோரப் பகுதிகள், குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடாவில் நாளை 40–50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேர மழை பதிவுகள் (இன்று காலை 8.30 மணி நிலவரப்படி):
- நீலகிரி: மேல் கூடலூர், கூடலூர் சந்தை – தலா 14 செ.மீ.
- கோவை: சின்னக்கல்லார் – 9 செ.மீ.
- நீலகிரி: தேவாலா – 9 செ.மீ.
- கோவை: சோலையார் – 8 செ.மீ.
- நீலகிரி: விண்ட் வொர்த் எஸ்டேட் – 8 செ.மீ.
- நீலகிரி: அவலாஞ்சி, பார்வூட், கிளன்மார்கன் – தலா 7 செ.மீ.
- திருநெல்வேலி: ஊத்து, நாலுமுக்கு – தலா 7 செ.மீ.
- கோவை: வால்பாறை – 7 செ.மீ.