அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

கூவத்தூரில் நாளை நடைபெறவுள்ள இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள கூவத்தூர் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமியில் ‘ஹுக்கும்’ (Hukum) என்ற பெயரில் அனிருத்தின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அனிருத் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும், முன்பதிவு விவரங்களையும் வெளியிட்டுள்ளார். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையும் நடைபெற்றது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அனுமதி இல்லாமல் நிகழ்ச்சி நடத்தப்படுவதாகக் கூறி, செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று காலை மனு தாக்கல் செய்தார்.

நீதி மன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டால் இன்று பிற்பகல் 2:15 மணிக்கு அதை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

Facebook Comments Box