ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க நகை காணிக்கை அளிக்கும் பக்தர்
திருப்பதி ஏழுமலையானுக்கு விரைவில் 121 கிலோ எடையுள்ள தங்க நகைகளை, பெயர் தெரியாமல், ஒரு பக்தர் காணிக்கையாக வழங்க உள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: “ஏழுமலையானின் தீவிர பக்தர்களில் ஒருவன் ஒரு நிறுவனம் தொடங்கி, அதில் அதிக லாபம் ஈட்டினார். 60 சதவீத விற்பனையிலேயே ரூ.6,000 முதல் ரூ.7,000 கோடி வரை லாபம் வந்தது. இதனால் அந்த பக்தர், இதெல்லாம் திருப்பதி ஏழுமலையானின் கருணை என்று உணர்ந்து, 121 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்களை வழங்க முடிவு செய்தார்.
அந்த பக்தர் என்னை நேரடியாக சந்தித்து கடிதம் கொடுத்தார். தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் 120 கிலோ தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்படுவதை அவரிடம் எடுத்துரைத்தேன். அப்போது அவர் ஆச்சரியப்பட்டார். நான் 121 கிலோ எடையுள்ள ஆபரணத்தை வழங்கினால், சுவாமிக்கு ஒரு நாள் அணியும் ஆபரணத்தின் எடையை விட 1 கிலோ அதிகமாக வழங்குவேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்,” என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ஆண்டுதோறும் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தில், வைர கவச அலங்காரத்தில் பவனி வரும் உற்சவர் மலையப்பர் அணிவிக்கிறார்.
தற்போது அந்த பக்தர் யார்? எனும் கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்கு சக்கரவர்த்திகள், சேர, சோழ, பாண்டிய, பல்லவர் அரசர்கள், பல குறுநில மன்னர்கள், சாளுக்கியர்கள், மஹந்துக்கள், முதல் அரசர் காலம் முதல் தற்போதைய அம்பானி காலம் வரை பலர் தங்கம், வைரம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக வழங்கி உள்ளனர்.
இவை இன்றும் பிரம்மோற்சவம் போன்ற விசேஷ நாட்களில், உற்சவரான மலையப்பர் அணிந்து வீதி உலா வருவதை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். சமீப காலமாக அதிகமாக தங்க நகைகளை பக்தர்கள் காணிக்கையாக வழங்குவதால், திருப்பதி தேவஸ்தானம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. முன்கூட்டியே அனுமதி பெற்ற பின்னர் தான் தங்கம், வைரம் ஆபரணங்களை பக்தர்கள் காணிக்கையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
மேலும், ஆண்டுக்கு ஒரு டன்னுக்கும் மேல் தங்க நகைகள் உண்டியல் மூலமாக மட்டுமே ஏழுமலையானுக்கு பக்தர்கள் வழங்கப்படுகின்றன. சுவாமிக்கு உள்ள ஆபரணங்களை தவிர, உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் ஆபரணங்கள் தற்போது அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த 23.5.2010-ல் 1075 கிலோ தங்கத்தை திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள் டெபாசிட் செய்தனர். 2022 செப்டம்பர் 30 நிலவரப்படி, திருப்பதி ஏழுமலையான் பெயரில் 10,258 கிலோ தங்க நகைகள் பல அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தில், வைர கவச அலங்காரத்தில் பவனி வரும் உற்சவர் மலையப்பர் அணிவிக்கிறார்.