மேல்மலையனூரில் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம் – பெருமளவில் பக்தர்கள் தரிசனம்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற அங்காளம்மன் கோயிலில், ஆவணி மாத அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் அதிகாலையில் கோயில் கதவுகள் திறக்கப்பட்டு, மூலவரான அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தங்கக் கவச அலங்காரத்துடன் மகா தீபாராதனை நிகழ்த்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து, வடக்கு வாசல் வழியாக ஊஞ்சல் மண்டபத்திற்கு வந்த அம்மன், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது கோயில் பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாடினர். ஊஞ்சலில் அமர்ந்த அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி, அம்மனை தரிசித்து அருளைப் பெற்றனர். நள்ளிரவு உற்சவம் நிறைவடைந்ததும், உற்சவர் மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.