இந்தியப் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி இன்று முதல் அமலில் : அடிபணிய மாட்டோம் என பிரதமர் உறுதி

இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரியை இன்று முதல் அமல்படுத்தியுள்ளது. ஆனால், எந்த அழுத்தத்திற்கும் இந்தியா தலைகுனியாது என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இந்திய இறக்குமதி பொருட்களுக்கான கூடுதல் வரி தொடர்பான உத்தரவை அமெரிக்க சுங்கத் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. ரஷ்யாவால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கும் அபாயங்களை சமாளிக்கின்ற கொள்கையின் கீழ், இந்தியப் பொருட்கள் மீது இந்த புதிய வரிகள் விதிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (ஆகஸ்ட் 27) நள்ளிரவு 12.01 மணி முதல் அமலுக்கு வந்துவிட்டன.

இந்த வரிவிதிப்பால், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 66 சதவீதம் பாதிக்கப்படும் என்று சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் (GTRI) தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள 50 சதவீத வரி, இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும். குறிப்பாக ஜவுளி, ரத்தினங்கள், நகை, இறால், கம்பளங்கள், மென்பொருள், மரச்சாமான்கள் போன்றவற்றின் ஏற்றுமதியில் 60.2 பில்லியன் டாலர் மதிப்பிலான இழப்புகள் ஏற்படும். இதனால் தொழிலாளர் அடிப்படையிலான துறைகளின் ஏற்றுமதி சுமார் 70 சதவீதம் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

2025 நிதியாண்டில் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 86.5 பில்லியன் டாலராக இருந்தது. தற்போதைய வரி விதிப்பால் அது 49.6 பில்லியன் டாலராக சரிவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியில் மொத்தம் 43 சதவீத குறைவு ஏற்படும். பெருமளவில் வேலை இழப்புகளும் உருவாகும். இது இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தையில் தீவிரமான சவாலை எழுப்பும். மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதத்திலிருந்து 5.6 சதவீதமாக குறையும் என அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

இதற்கிடையில், எந்தவித வெளிப்புற அழுத்தத்திற்கும் இந்தியா தலைவணங்காது என பிரதமர் மோடி உறுதி தெரிவித்துள்ளார். “சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளை பாதுகாப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எந்த சவால்கள் வந்தாலும் அதற்கு அடிபணிய மாட்டேன்” என அவர் வலியுறுத்தினார்.

Facebook Comments Box