பழநி பாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவம் இன்று (செப்.2) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலாக விளங்கும் இந்தக் கோயில், கி.பி.1428-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி உடனிருக்கும் வரதராஜப் பெருமாள் இங்கு அருள்பாலிக்கிறார்.

கோயிலில் வீரஆஞ்சநேயர், கருடாழ்வார், திருமங்கையாழ்வார், விநாயகர், கிருஷ்ணர், மகாலட்சுமி ஆகியோருக்கும் தனித்தனியான சந்நிதிகள் உள்ளன. கருடாழ்வார் சன்னதிக்கு மேல் 12 ராசிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த ராசிக் கட்டத்தின் முன் நின்று வேண்டினால் விருப்பம் நிறைவேறும் எனும் ஐதீகம் நிலவுகிறது. மேலும், பெருமாளின் தசாவதார திருக்கோலங்களையும் இக்கோயிலில் காணலாம் என்பது சிறப்பு.

ஆவணி பிரம்மோற்சவம் இன்று தொடங்கி செப்டம்பர் 12 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

முதல் நாள் நிகழ்ச்சியாக காலை பெருமாள், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காலை 8 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. இதில் கோயில் துணை ஆணையர் வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அழகர்சாமி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த பத்துநாள் விழாவில் தினமும் பக்தி சொற்பொழிவு, சுவாமி வீதியுலா நடைபெறும். விழாவின் சிறப்பு நிகழ்வுகள் வருமாறு:

  • செப்.8 மாலை 6 மணி: திருக்கல்யாணம்
  • செப்.9 இரவு: பாரி வேட்டை
  • செப்.10 காலை 6.30: தேரோட்டம், தொடர்ந்து தேர்கால் பார்த்தல்
  • செப்.11: கொடியிறக்கம்
  • செப்.12: விடையாற்றி உற்சவத்துடன் நிறைவு
Facebook Comments Box