மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் டிக்கெட் ரூ.100 என நிர்ணயம்
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) செப்டம்பர் 30-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான பரிசுத்தொகை ரூ.122.50 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.39.95 கோடி வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறும் லீக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விலையை ஐசிசி அறிவித்துள்ளது. முதல் கட்ட விற்பனையில் டிக்கெட்டுகள் ரூ.100 க்கு வழங்கப்பட உள்ளன. இது, ஐசிசி நடத்தும் எந்தப் போட்டிகளிலும் இல்லாத குறைந்த விலை. டிக்கெட் விற்பனை வரும் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது. அதே நாளில் 2-வது கட்ட விற்பனைக்காக ரசிகர்கள் பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகளிர் உலகக் கோப்பையின் தொடக்க விழா மிகுந்த சிறப்பாக நடைபெற உள்ளது. அதில் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பங்கேற்று இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.