பிஜேடி போன்று பிஆர்எஸ் கட்சியும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க தீர்மானம்

பிஜு ஜனதா தளம் (பிஜேடி) எடுத்த முடிவைப் போலவே, பாரத் ராஷ்ட்ர சமிதி (பிஆர்எஸ்) கட்சியும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பங்கேற்காமல் இருக்க அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமா ராவ் கூறியதாவது:

“வரவிருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பிஆர்எஸ் எம்பிக்கள் வாக்களிக்க மாட்டார்கள். இந்த முடிவு கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழு ஆலோசனையில் எடுக்கப்பட்டது.

பாஜக கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியும் இருவரும் நல்லவர்கள்தான். ஆனாலும் மத்தியில் ஆளும் பாஜகவும், மாநிலத்தில் ஆளும் காங்கிரஸும் தெலங்கானா விவசாயிகளை புறக்கணித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். யூரியா பற்றாக்குறையால் விவசாயிகள் அனுபவிக்கும் துயரத்தையும், அவர்களின் கோபத்தையும் வெளிப்படுத்தும் வகையில்தான் இந்த புறக்கணிப்பு.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் நோட்டா இருந்திருந்தால், நாங்கள் அதை பயன்படுத்தியிருப்போம். அது இல்லாததால் வாக்களிப்பிலேயே பங்கேற்கவில்லை” என்றார்.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி பிஆர்எஸ் முடிவை கடுமையாக எதிர்த்துள்ளது. பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் மற்றும் எம்பியான சாமலா கிரண் குமார் ரெட்டி கூறியதாவது:

“தெலங்கானாவில் யூரியா பற்றாக்குறையை காரணம் காட்டி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பது பிஆர்எஸ் சொல்லும் அபத்தமான வாதம். மக்களவையில் பிஆர்எஸ் கட்சிக்கு ஒரே ஒரு எம்பி கூட கிடையாது. தெலங்கானா ராஷ்ட்ர சமிதி என்ற பெயரை மாற்றி பாரத் ராஷ்ட்ர சமிதி என வைத்த நாளிலிருந்து அந்தக் கட்சி தெலங்கானா உணர்விலிருந்து விலகிவிட்டது. தன்னுடைய தோற்றுவிக்கப்பட்ட அடிப்படை நோக்கையே அது மறந்துவிட்டது” என்று அவர் விமர்சித்தார்.

தற்போது மக்களவையில் பிஆர்எஸ்க்கு எம்.பி.யில்லை. ஆனால் மாநிலங்களவையில் நான்கு உறுப்பினர்கள் உள்ளனர். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நாளை (செப்டம்பர் 9) புதுதில்லியில் நடைபெற உள்ளது. அதே நாளில் முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன.

Facebook Comments Box