இரும்புத் தாது ஏற்றுமதி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா கைது
கர்நாடக மாநிலம் கார்வார்–அங்கோலா தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் கிருஷ்ணா மீது, 2010-ஆம் ஆண்டு 1.25 லட்சம் டன் இரும்புத் தாதுவை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவர் மீது அபராதம் விதித்தது.
அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் அமலாக்கத்துறை (ED) புதிய வழக்குப் பதிவு செய்தது. விசாரணையில், சதீஷ் கிருஷ்ணா துறைமுக அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், ரூ.86.78 கோடி மதிப்பிலான இரும்புத் தாதுவை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்தது வெளிப்பட்டது.
மேலும், ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் அவரது இல்லம், அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் நடைபெற்ற சோதனையில், ரூ.1.68 கோடி ரொக்கம், 6.75 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு, அவரது நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.14.13 கோடி முடக்கப்பட்டது.
இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் சதீஷ் கிருஷ்ணாவை கார்வாரில் கைது செய்து, நீதிமன்ற அனுமதியுடன் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஓராண்டில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா உள்ளிட்டோர்மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சமீபத்தில், கோவாவில் சூதாட்ட விடுதியில் சட்டவிரோத சூதாட்டம் நடத்தியதாக சித்ரதுர்கா காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திர பப்பியும் கைது செய்யப்பட்டார்.