பட்டாசுத் தடையை நாடு முழுவதும் ஏன் நீட்டிக்கக் கூடாது? – மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

பட்டாசுகளுக்கு டெல்லியில் விதிக்கப்பட்ட தடை, நாடு முழுவதும் அமல்படுத்தப்படக்கூடாதா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

‘பேரியம் நைட்ரேட் போன்ற ஆபத்தான வேதிப்பொருட்கள் பட்டாசு உற்பத்தியில் பயன்படுத்தப்படுவதால், மனித உடல்நலனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கின்றன. எனவே, அவற்றைத் தடை செய்ய வேண்டும்’ என்று கோரி அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் தாக்கல் செய்த பொதுநல மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என முன்பு உத்தரவிட்டது.

இதற்கிடையில், பட்டாசு வெடிப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று அர்ஜுன் கோபால் தாக்கல் செய்த மற்றொரு மனுவின் அடிப்படையில், டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் 2024-ஆம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டது. ஆனால், பட்டாசுத் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தடையை நீக்க வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

விசாரணையின் போது தலைமை நீதிபதி கருத்து: “பட்டாசுத் தடை உத்தரவு டெல்லி மட்டும் அல்லாது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும். வளமானவர்கள் வாழும் டெல்லிக்கே மட்டும் சுத்தமான காற்று தேவைப்படுகிறதா? நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்களுக்கும் தூய்மையான காற்றை சுவாசிக்கும் உரிமை இருக்கிறது.”

உச்ச நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அபராஜிதா சிங் தெரிவித்தது: “டெல்லியில் குளிர்காலங்களில் காற்று மாசு அதிகரிப்பதால், அவசர நடவடிக்கையாக கட்டுமான பணிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. அப்போது தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.”

இதையடுத்து நீதிபதிகள் உத்தரவிட்டது: “கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கும்போது தொழிலாளர்கள் வேலை இழந்து சிரமப்படுகின்றனர். இறுதியில் பாதிப்பு ஏழை மக்களுக்கு தான் ஏற்படுகிறது. அதேபோல், பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் டெல்லியில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரும் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். மேலும் பசுமை பட்டாசு தயாரிப்பு குறித்து நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.”

Facebook Comments Box