சென்னை பூக்கடையிலிருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் – செப்டம்பர் 22 தொடக்கம்

இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் நடைபெறும் 21வது ஆண்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம், வரும் செப்டம்பர் 22-ம் தேதி காலை 10.31 மணிக்கு சென்னை பூக்கடை சென்னகேசவப் பெருமாள் கோயிலில் இருந்து தொடங்குகிறது.

திருமலை திருப்பதி பிரம்மோற்சவ காலத்தில் நடைபெறும் கருடசேவைக்காக, தமிழகம் சார்பில் 11 வெண்பட்டு திருக்குடைகள், வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்கள் வழங்குவது வழக்கம். இதனை ஆண்டுதோறும் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பணியை இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆண்டும் உடுப்பி பலிமாரு மட பீடாதிபதி ஸ்ரீவித்யாதீஷ தீர்த்த ஸ்வாமிகள் ஆசீர்வதித்து ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார். பின், என்எஸ்சி போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாகச் செல்லும் ஊர்வலம் மாலை 4 மணிக்கு கவுனி தாண்டி, இரவு அயனாவரம் காசி விஸ்வநாதர் கோயிலில் நிறைவடைகிறது.

பின்னர், வில்லிவாக்கம், திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருவள்ளூர் வழியாகச் சென்று, செப்டம்பர் 27-ம் தேதி காலை திருப்பதி சென்றடையும். அங்கு மாடவீதியில் வலம் வந்து, திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் தேவஸ்தான அதிகாரிகளிடம் திருக்குடைகள் ஒப்படைக்கப்படும்.

ஊர்வலத்தின் போது யாரும் திருக்குடையின்மீது நாணயம் வீசக்கூடாது, காணிக்கை செலுத்தக்கூடாது என்றும், எந்தவித நன்கொடைகளும் பெறப்படமாட்டாது என்றும் டிரஸ்ட் அறிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு: 73730 99562 / 73730 99563.

Facebook Comments Box