கேரளா: இந்து பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமியர்
புற்றுநோயால் உயிரிழந்த பெண்ணின் கடைசி விருப்பப்படி, கேரளாவைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினரும் முஸ்லிமுமான சஃபீர், அவருக்கு இந்து முறைப்படி இறுதி சடங்குகளைச் செய்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கடினம்குளம் கிராம பஞ்சாயத்தில் பெனடிக்ட் மென்னி உளவியல்–சமூக மறுவாழ்வு மையம் இயங்கி வருகிறது. அங்கு சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 44 வயது ராகி என்ற பெண் சிகிச்சை பெற்று வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், மரண படுக்கையில் இருக்கும் போது “இந்து முறைப்படி இறுதி சடங்குகள் செய்ய வேண்டும்” என்ற தனது கடைசி ஆசையைத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை; சொந்த ஊர் பற்றிய தகவல்களும் நினைவில் இல்லை. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் உயிரிழந்தார். மையத்தை பராமரித்துக் கொண்டிருந்த கன்னியாஸ்திரிகள், சிட்டாட்டுமுக்கு கிராம பஞ்சாயத்து உறுப்பினர் சஃபீரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சஃபீர், அந்தப் பெண்ணின் கடைசி விருப்பப்படி, மகன் ஸ்தானத்தில் முன்னின்று, இந்து சடங்குகளின் படி அவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தார்.
“அவரது உறவினர்களைத் தேடும் முயற்சி பலனளிக்கவில்லை. ஒருவரின் கடைசி ஆசை நிறைவேற வேண்டும்; அதுவே நம்மால் செய்ய வேண்டிய கடமை. அதைத்தான் என் மதமும் எனக்கு கற்பிக்கிறது. என் வார்டில் பல மதத்தவர்களின் இறுதி சடங்குகளில் பங்கேற்ற அனுபவம் உண்டு. அதனால் சடங்குகள் குறித்து எனக்கு பரிச்சயம் இருந்தது. தகனக் கூடத்தில் இருந்தவர்களும் வழிகாட்டினர். இதற்கு என் மதம் எந்தத் தடையும் இல்லை. உள்ளூர் ஜமாத்தின் இமாமும் என்னை வாழ்த்தி, இது சரியான செயல் எனக் கூறினார்” என்று சஃபீர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பும், இதேபோல் ஒரு இந்து நபரின் இறுதி சடங்குகளைச் செய்திருந்தார் சஃபீர். தற்போது அவரது மனிதநேயச் செயலை கேரள நெட்டிசன்கள் “தி ரியல் கேரளா ஸ்டோரி” என்று புகழ்ந்து வருகின்றனர்.