நவராத்திரி வரலாறு! Navratri
நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்!
நவராத்திரியின் சிறப்புகள், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தனர். அவர்கள் தெய்வங்களிடம் பல வரங்கள் பெற்றுவிட்டு, தங்களை அழிக்க யாருமில்லை எனத் தலைக்கனம் பிடித்துச் திரிந்தனர். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சிச் நடுங்கினர். இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள், மஹா விஷ்ணுவிடமும் சிவனிடமும் முறையிட்டனர். அவர்களுடன் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவரும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தேவியின் ஒன்பது வடிவங்கள்—துர்கா, ஷைலபுத்ரி, பிரம்மச்சாரிணி, சந்திரகாந்தா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்ரி ஆகிய பெயர்களில் வட இந்தியாவில் வணங்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வண்ணம் மற்றும் முக்கியத்துவம் கொண்டது.
நவராத்திரி தேவியின் 9 வடிவங்களின் பெயர்கள்:
- ஷைலபுத்ரி (முதல் நாள்): பனி மலையின் மகள், சக்தி வாய்ந்த வடிவங்களில் ஒன்று.
- பிரம்மச்சாரிணி (இரண்டாம் நாள்): பிரம்மச்சாரியின் ஒழுக்கத்தைக் குறிக்கிறார்.
- சந்திரகாந்தா (மூன்றாம் நாள்): சந்திரனைப் போன்ற அமைதியையும் அழகையும் குறிக்கிறார்.
- கூஷ்மாண்டா (நான்காம் நாள்): அண்டத்தை உருவாக்கியவர் என்று வணங்கப்படுகிறார்.
- ஸ்கந்தமாதா (ஐந்தாம் நாள்): கார்த்திகேயனின் தாய்.
- காத்யாயினி (ஆறாம் நாள்): மகிஷாசுரனை அழித்த தேவி.
- காளராத்திரி (ஏழாம் நாள்): இருளின் அச்சத்தைக் குலைப்பவர்.
- மகாகௌரி (எட்டாம் நாள்): சிவபெருமானின் துணைவி.
- சித்திதாத்ரி (ஒன்பதாம் நாள்): எல்லா வளங்களையும் அருள்பவர்.
மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவத்தில் பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை ஒன்று சேர்த்து அன்னைக்கு அளித்துவிட்டு சிலை ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை அளித்து சிலையாக நின்றனர். அப்படி அவர்கள் நின்றதால் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும் அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.
அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போரின்றி நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் சில சட்ட திட்டங்கள் உள்ளன; மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுக்கின்றன. அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்ததால் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.
நவராத்திரியில் எவ்வாறு அலங்காரம் செய்ய வேண்டும்?
நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர். முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும்; கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் அலங்கரித்து மூப்பெரும் சக்தியரை தென்னிந்தியாவில் வழிபடுவார்கள்.
- முதல் நாள்: தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி.
- இரண்டாம் நாள்: கவுமாரி, குமாரியாகப் போற்றப்படுகிறாள்; ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள்.
- மூன்றாம் நாள்: கன்யா கல்யாணி.
- நான்காம் நாள்: மகாலட்சுமி, ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள்.
- ஐந்தாம் நாள்: வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர்.
- ஆறாம் நாள்: இந்திராணி, சர்ப ராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்யப்படும்.
- ஏழாம் நாள்: மகாசரஸ்வதி, சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள்.
- எட்டாம் நாள்: நரசிம்மிதருமி, நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம்; அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள்.
- ஒன்பதாம் நாள்: சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக வழிபடுவர்.
- பத்தாம் நாள்: அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றியைக் குறிக்கும் விஜயதசமி.
இந்த வடிவங்களில் தேவியைத் தரிசித்து வழிபடுவதால் நவநிதிகளும் பெற்று, நீடுழி வாழ்வர் என்பது ஐதிகம்.
ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாட வேண்டும்!
தேவி புராணம் கூறுகிறது: சித்திரையில் வரும் வசந்த நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி. கோடை, குளிர் பருவத்தில் நோய்நொடிகள் பரவும் போது மக்களை காக்கவே இதை நடத்தினர். தற்போது புரட்டாசி சாரதா நவராத்திரி வழக்கில் உள்ளது.
அம்மன் விரும்பும் நவராத்திரி!
நவராத்திரி பூஜையை தெய்வங்களும், தேவர்களும் செய்து பலன் பெற்றுள்ளனர். நாரதர் அறிவுரைப்படி ராமர் ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தார். கண்ணபிரான், சியமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் நீங்கியது. பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் பூஜை செய்ததால்தான். தீய சக்தி மேலோங்கும்போது அம்பாள் ஒன்பது கோடி வடிவங்கள் கொண்டு தீமையை அழித்து நன்மை செய்வாள் என தேவி மகாத்மியம் கூறுகிறது.
நவராத்திரியில் 9 நாட்களும் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமே விரதம் செய்து பூஜை செய்யலாம். விஜயதசமி அன்று அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள். அன்றைய தினம் புதிதாகத் தொடங்கும் எல்லாக் காரியங்களும் எளிதாகவும் வசமாகவும் இருக்கும் என்பது ஐதீகம்.
நவராத்திரி வழிபாடு வாழ்வின் இன்னல்களை நீக்கி, தேவியின் அருளைப் பெறும் வழிபாட்டு நியதிகளைச் சொல்லி தருகிறது. ஒவ்வொரு நாளும் தேவியின் ஒரு வடிவத்தைத் தியானித்து, பூஜித்து வழிபட வேண்டும்.
நவராத்ரி வ்ரதப் பூமௌ குருதேயோ நரோத்தம
தஸ்ய புண்ய பலம் வக்தும் ஸக்தா ஸா பரமேஸ்வரீ.