இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர் உரிமையை ரூ.579 கோடிக்கு பெற்ற அப்போலோ டயர்ஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர் உரிமையை ரூ.579 கோடிக்கு அப்போலோ டயர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. சுமார் இரண்டரை ஆண்டு காலத்திற்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த காலகட்டத்தில் இந்திய அணி சுமார் 121 இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளும், ஐசிசி நடத்தும் 21 போட்டிகளும் விளையாட உள்ளது. இந்த ஏலத்தில் கேன்வா மற்றும் ஜே.கே சிமெண்ட் நிறுவனங்கள் பங்கேற்றன. அதில் அதிக தொகையை முன்வைத்த அப்போலோ டயர்ஸே ஸ்பான்சர் உரிமையை பெற்றுள்ளது.

இதன்படி, இந்திய அணி ஆடும் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் சுமார் ரூ.4.77 கோடி செலவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

வரும் 2028 மார்ச் மாதம் வரை அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தின் லோகோ, இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் இடம்பெறும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

‘ட்ரீம் 11’ நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிய நிலையில், அப்போலோ டயர்ஸ் ஸ்பான்சர் உரிமையை பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட உள்நாட்டு தொடர் முதல் அப்போலோ டயர்ஸ், இந்திய அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக செயல்படும். இந்த தொடர் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான அணியை மேற்கு இந்தியத் தீவுகள் ஏற்கனவே அறிவித்துள்ளது.

Facebook Comments Box