ஏ.சி., எல்இடி பல்பு தயாரிப்பாளர்களுக்கு பிஎல்ஐ ஊக்கத் தொகை திட்டத்துக்கான விண்ணப்ப பதிவு மீண்டும் தொடக்கம்
ஏ.சி., எல்இடி பல்பு உள்ளிட்ட வெள்ளை பொருட்கள் (White Goods) தயாரிப்பாளர்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை (PLI) திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவு இன்று (செப்டம்பர் 16) முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
மத்திய அமைச்சரவை, 2021 ஏப்ரல் 7-ஆம் தேதி இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 16-ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு ரூ.6,238 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து, அதிக முதலீட்டை ஈர்ப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்கான விண்ணப்பப் பதிவு ஏற்கனவே மூன்று சுற்றுகளாக நடைபெற்றது. இதுவரை 83 விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பிஎல்ஐ திட்டத்தின் 4-வது சுற்று விண்ணப்பப் பதிவு இன்று தொடங்குகிறது. அதிக முதலீடு செய்ய தொழில் துறையினர் விருப்பம் தெரிவித்துள்ளதால், விண்ணப்பப் பதிவு மீண்டும் திறக்கப்படுகிறது. வரும் அக்டோபர் 14 வரை விண்ணப்பிக்கலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
‘சுயசார்பு இந்தியா’ (Atmanirbhar Bharat) திட்டத்தின் கீழ், செல்போன் மற்றும் மின்னணு சாதன உற்பத்தி உட்பட மொத்தம் 14 துறைகளுக்கு பிஎல்ஐ திட்டம் அமல்படுத்தப்படுகிறது. துறைவாரியான குறைகளை நீக்குதல், பெருமளவு உற்பத்தி வாய்ப்புகளை உருவாக்குதல், ஏற்றுமதியை அதிகரித்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவாக்குதல் என்பவையே திட்டத்தின் முக்கிய இலக்குகள்.
இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.1.9 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, ரூ.17 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தி அதிகரித்து, 12.3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.