மீண்டும் சாதனை: தங்கம் பவுன் விலை ரூ.82 ஆயிரத்தைத் தாண்டியது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.560 அதிகரித்து, ரூ.82,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்க விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.10,280-ஆகவும், 24 காரட் சுத்த தங்கம் ரூ.89,712-ஆகவும் இருந்தது.

சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு போன்றவை தங்க விலை உயர்வுக்கு காரணமாக உள்ளன. குறிப்பாக, அமெரிக்காவில் இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பு, ரூபாய் மதிப்பு குறைவு ஆகியவை தங்க விலை நாள்தோறும் புதிய சாதனை படைக்க வழிவகுத்துள்ளன.

செப்.6 அன்று பவுன் தங்கம் ரூ.80,040 இருந்த நிலையில், செப்.9 அன்று ரூ.81,200, செப்.12 அன்று ரூ.81,920 ஆகிய விலைகளில் விற்று புதிய உச்சங்களை எட்டியது. சிறிது சரிவு ஏற்பட்ட பின், மீண்டும் ரூ.82 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதே சமயம், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து ரூ.144-ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.1,000 உயர்ந்து ரூ.1.44 லட்சமாகவும் விற்றது.

தங்க விலை தொடர்ந்து அதிகரிப்பதால், பண்டிகை மற்றும் திருமண நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ். சாந்தக் குமார் தெரிவித்ததாவது:

“தங்க விலை உயர்வுக்கு முக்கிய காரணம் புவிசார் அரசியல் மற்றும் அமெரிக்க அதிபரின் வரிக் கொள்கை. அடுத்த நாட்களிலும் தங்க விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.

Facebook Comments Box