எச்1 பி விசா கட்டணத்தில் அதிரடி காட்டிய ட்ரம்ப்: இந்தியாவுக்கு பாதிப்பா?
அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாக்களுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) உயர்த்தும் உத்தரவுக்கு அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் தாக்கம் என்ன என்பது விவாதப் பொருளாக உள்ளது. இது இந்தியாவுக்கு நெருக்கடி என்பதும், இல்லை, இந்தியர்கள் திறமை முழுமையாக இந்தியாவுக்கு பயன்படும் என்பதும் வாதமாகக் குறிப்பிடப்படுகின்றன.
2020 முதல் 2023 வரை வழங்கப்பட்ட எச்1பி விசாக்களில் 71 சதவீதம் இந்தியர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா வழங்கும் எச்1பி விசாக்களில் ஐந்து விசாக்களில் ஒன்று இந்தியா சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களால் கைப்பற்றப்படுகிறது. முன்பாக எச்1பி விசாக்களுக்கு ரூ.1.32 லட்சம் கட்டணமாக இருந்த நிலையில், இது இப்போது ரூ.88 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்தச் சூழலில், மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற டெக் நிறுவனத்தில் ஓர் இளம் பணியாளருக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்கும் என்று எடுத்துக் கொள்வோம். அவர் H-1B விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். இது இந்தியர்களுக்கு பின்னடைவு ஏற்படுத்தும். அமெரிக்காவில் வேலை என்ற கனவில் இருக்கும் இளம் தலைமுறையினருக்கு இது தடையாக இருக்கும்.
இந்த நகர்வின் மீது இந்தியா உட்பட வெளிநாடுகளில் டெக் நிறுவனங்கள் எதிர்வினை தெரிவித்தாலும், “வெளிநாட்டினரை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது, அமெரிக்காவுக்கு பணிக்கு வரும் வெளிநாட்டினர் திறமையானவர்கள் என்பதையும், அமெரிக்க தொழிலாளர்களை மாற்றக்கூடாது என்பதையும் உறுதி செய்யும். அமெரிக்க தொழிலாளர்களைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம். இந்த திட்டம் மூலம் அமெரிக்காவின் கருவூலத்துக்கு 100 பில்லியன் டாலருக்கு மேல் நிதி கிடைக்கும்,” என்று ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் ஆட்சிக்கு வரும்முன் முன்வைத்த முக்கிய வாக்குறுதி “அமெரிக்காவை மீண்டும் மிகப்பெரியதாக ஆக்கும்” என்பதாகும். MAGA என்ற அவரது வாக்குறுதியை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் லேட்டஸ்ட், எச்1பி விசா கட்டண உயர்வு.
அமெரிக்காவில் இந்த நகர்வுக்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது. 1 லட்சம் டாலர் விசா கட்டணத்தால் அமெரிக்க நிறுவனங்கள் இனி அமெரிக்க பட்டதாரிகளை அதிகம் பணியில் அமர்த்துவார்கள் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கர்கள் செய்ய முடியாத பணிகளுக்கு மட்டுமே வெளிநாட்டினரை அமர்த்த வேண்டும் என்பது ட்ரம்பின் நோக்கம்.
இதனால் இந்தியா நெருக்கடியாகலாம் என்ற பார்வை உள்ளது. ஆனால், இந்திய திறமைசாலிகள் இந்தியாவிலேயே பயன்படுத்தப்படுவார்கள் என்பதும் உண்மை. இது இந்தியாவின் திறமைகளை தக்கவைக்கும் மறுமலர்ச்சி எனவும் பார்க்கப்படுகிறது.
நிதி அயோக் முன்னாள் சிஇஓ அமிதாப் கந்த் கூறியதாவது:
“எச்1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்துவது அமெரிக்க பொருளாதாரத்தையே பாதிக்கும், இந்திய பொருளாதாரத்தை அல்ல. அமெரிக்காவில் புத்தாக்க சிந்தனைகளில் குறை ஏற்படும், ஆனால் இந்தியா அதிக திறமையைப் பெறும். சர்வதேச திறமைசாலிகளுக்கு கதவுகள் மூடப்படுவதால், அமெரிக்கா அடுத்த அலை ஸ்டார்ட் அப்ப்கள், ஆராய்ச்சி, காப்புரிமை சார்ந்த படைப்புகளை பெங்களூரு, ஹைதராபாத், புனே, குர்கானுக்கு தள்ளிவிடுகிறது. இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், அறிவியலாளர்கள், புத்தாக்க சிந்தனையாளர்கள், படைப்பாளிகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக அதிக பங்களிப்பு தருவார்கள். இது ‘விக்ஷித் பாரத்’-ஐ நோக்கி இந்தியாவை முன்னெடுக்கிறது.