கர்நாடகாவில் 14 கோயில்களில் சேவை கட்டண உயர்வு: பாஜக அதிருப்தி, இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கை என விமர்சனம்
கர்நாடகாவில் உள்ள 14 முக்கிய கோயில்களின் சேவை கட்டணங்கள் அக்டோபர் 1 முதல் உயர்த்தப்படவுள்ளதாக இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதை பாஜக கடுமையாக எதிர்த்துள்ளது.
கர்நாடகாவில் இந்து அறநிலையத்துறையின் கீழ் மொத்தம் 34,566 கோயில்கள் உள்ளன. இதில் ஏ பிரிவில் உள்ள 14 முக்கிய கோயில்களின் பூஜை, யாகம், பிரதிஷ்டை போன்ற சடங்குகளுக்கான கட்டணங்கள் ரூ.100 முதல் ரூ.250 வரை உயர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பெங்களூருவில் உள்ள ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்வாமி கோயில், நந்தி தீர்த்த சுவாமி கோயில், குக்கே ஸ்ரீ சுப்ரமணியா கோயில், ரெய்ச்சூரில் உள்ள ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோயில் உள்ளிட்ட கோயில்கள் அடங்கும். குறிப்பாக, குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரபலமான ஆஷ் லேஷ பூஜை மற்றும் நகர பிரதிஷ்டை சடங்குகளுக்கான கட்டணம் ரூ.400–இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் ஆர். அசோகா, “இந்து கோயில்களின் சேவை கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் முதல்வர் சித்தராமையா இந்துக்களுக்கு இடையூறை ஏற்படுத்தி வருகிறார். இது இந்து மக்களுக்கு எதிரான நடவடிக்கை. அரசு இதை திரும்ப பெற வேண்டும்” என கூறினார்.
இதற்கு பதிலாக, இந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்: “கோயில்களின் சேவை கட்டண உயர்வு கோயில் நிர்வாகங்களின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே செய்யப்பட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்டணங்களில் அரசு தலையிடவில்லை, இதில் கிடைக்கும் பணம் அரசுக்கு செல்லாது; அது அந்த கோயிலின் மேம்பாட்டிற்கே பயன்படுத்தப்படும்” என்று அவர் கூறினார்.