மகாளய அமாவாசையை முன்னிட்டு சென்னையில் கடற்கரை, கோயில் குளங்களில் ஏராளமானோர் தர்ப்பணம்

மகாளய அமாவாசையை முன்னிட்டு சென்னையில் கோயில் குளங்கள், மெரினா கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

அமாவாசை நாளில் விரதம் வைத்து தர்ப்பணம் கொடுத்தால் முன்னோரின் ஆசி கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதில் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை நாள் விசேஷமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக, புரட்டாசியில் வரும் அமாவாசை, மகாளய அமாவாசை எனப்படுகிறது. இதற்கு முந்தைய 15 நாட்களும், அதாவது ஆவணி மாத பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை தொடங்கி அடுத்து வரும் 15 நாட்களும் ‘மகாளய பட்சம்’ எனப்படுகிறது.

பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்கள் தங்கள் குடும்பத்தினரை காண இந்த நாட்களில் பூமிக்கு வருவதாக ஐதீகம். அதனால், மேற்கண்ட 15 நாட்களும் விரதம் வைத்து முன்னோர் வழிபாடு செய்வது விசேஷமானது. இயலாதவர்கள் மகாளய பட்ச காலத்தின் நிறைவு நாளான மகாளய அமாவாசையன்று முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவர்.

நேற்று மகாளய அமாவாசை என்பதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் ஏராளமானோர் குவிந்து, முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர். சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், கோவளம் கடற்கரை பகுதிகளில் அதிகாலை முதலே மக்கள் திரண்டனர். கடலில் நீராடிய பிறகு, எள், நீர் ஆகியவற்றை வைத்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.

வியாசர்பாடி ரவீஸ்வரர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் குளக்கரைகளில் ஏராளமானோர் திரண்டு தர்ப்பணம் செய்தனர். இதனால், அதிகாலை முதலே பல புரோகிதர்கள் கோயில் குளங்கள், மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் வந்து தர்ப்பண சடங்குகளை செய்து வைத்தனர். பலர் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கினார்கள்.

Facebook Comments Box