கடந்த 5 ஆண்டுகளில் ஒடிசாவிலிருந்து புலம்பெயர்ந்த 289 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஒடிசா சட்டப்பேரவையில் பிஜு ஜனதா தளம் எம்எல்ஏவின் கேள்விக்கு மாநில தொழிலாளர் நல அமைச்சர் கணேஷ் ராம் சிங்குந்தியா அளித்த பதில் வருமாறு: கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான கடந்த 5 ஆண்டுகளில் ஒடிசாவை சேர்ந்த 289 தொழிலாளர்கள் பிற மாநிலங்களில் பணியாற்றும்போது உயிரிழந்தனர். இதே காலகட்டத்தில், பிற மாநிலங்களில் இருந்து ஒடிசா தொழிலாளர்கள் 5,612 பேரை அரசு மீட்டுள்ளது.

2024-ம் ஆண்டில் ஒடிசாவிலிருந்து 70,142 தொழிலாளர்களை பணியமர்த்துவதற்காக 1,037 ஒப்பந்ததாரர்களுக்கு ஒடிசா அரசு உரிமம் வழங்கியது. 1979-ம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் இந்த உரிமங்கள் வழங்கப்பட்டன.

ஒடிசாவில் இருந்து புலம்பெயரும் தொழிலாளர்களின் துயரங்களை குறைப்பதற்கு துணை முதல்வர் கே.வி.சிங் தியோ தலைமையில் உயர்நிலை பணிக்குழுவை அரசு அமைத்துள்ளது. இந்த பணிக்குழு அடுத்த கட்ட நடவடிக்கைக்காக பல்வேறு தரப்பினருடன் 3 கூட்டங்களை நடத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Facebook Comments Box