‘பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவது தான் குறிக்கோள்’ – வருண் சக்ரவர்த்தி

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையிலான ‘சூப்பர் 4’ சுற்று போட்டி கடந்த 24-ம் தேதி நடைபெற்றது. இதில் பந்து வீசிய இந்திய பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, தனது முதல் 8 பந்துகளில் 21 ரன்கள் கொடுத்தார். பின்னர் அவர் அடுத்த 16 பந்துகளில் வெறும் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து, 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. போட்டிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் வருண் கூறியது: “பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவதே என் முக்கிய குறிக்கோள். சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்து, சற்று திருப்புவது எனது பணி. அந்த வகையான பந்துகளை வீசுவதே எனது முயற்சி. ரன்கள் கொடுக்கப்பட்டாலும், அட்டாக்கிங் பாணியில் பந்து வீசி விக்கெட் வீழ்த்துவதே நோக்கம். பவர்பிளே முடிந்த பிறகு பீல்டிங் அமைப்பு விரிவடைகிறது, இது எங்களுக்கு நன்றாக அமைகிறது.

கடந்த ஐபிஎல் சீசனுக்கு பிறகு டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் விளையாடினேன். அதன் பின்னர் அதிக பயிற்சி செய்தேன். தற்போது என் பேட்டிங் மற்றும் பீல்டிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

நடப்பு தொடரில் 4 போட்டிகளில் வருண் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்த தொடரில் அவரது எகானமி ரேட் 6.80 என பதிவாகியுள்ளது.

Facebook Comments Box