அரை மணி நேரம் காத்திருப்பு; பூட்டிய அறையில் உரையாடல்: டிரம்ப் – ஷெரீஃப் சந்திப்பில் என்ன நடந்தது?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் நேற்று சந்தித்தார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது, பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றிருந்த ஷெபாஸ் ஷெரீஃப், நேற்று வாஷிங்டன் சென்று டிரம்ப்பைச் சந்தித்தார். அப்போது பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிரும் உடன் இருந்தார். 2019-ல் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபரை சந்தித்தார். அதன்பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபரைச் சந்திப்பது இதுவே முதல் முறை.
டிரம்ப் மீண்டும் இரண்டாவது முறை அதிபராகப் பதவியேற்ற பின், ஷெரீஃப் அவரை வெள்ளை மாளிகையில் சந்திப்பது இதுவே முதல்முறை. சில நாட்களுக்கு முன் ஐ.நா. பொதுச்சபை நேரத்தில், டிரம்ப் அரபு மற்றும் முஸ்லிம் தலைவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது காசா – இஸ்ரேல் போர் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் பின், ஷெரீஃப் டிரம்ப்பைச் சந்தித்தார்.
இந்நிலையில், டிரம்ப்பையும் ஷெரீஃப்பையும், அசிம் முனிரையும் ஓவல் அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றது. அப்போது கதவுகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், ரகசியமாக உரையாடல் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் ஷெரீஃப், தளபதி அசிம் முனீருடன் டிரம்ப்பைச் சந்தித்தார். அப்போது, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரும் இருந்தனர். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானுக்கு அளித்த ஆதரவுக்கு ஷெரீஃப் நன்றி தெரிவித்தார். மேலும் பாதுகாப்பு, உளவுத்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலியுறுத்தினார். டிரம்ப்பை ‘அமைதியின் மனிதர்’ என்று வர்ணித்த அவர், பல பிராந்தியங்களில் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர அவர் எடுத்த முயற்சிகளை பாராட்டினார். தெற்காசியாவில் ஏற்பட்ட ராணுவ மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் செய்த நடுவர் பணிக்கு நன்றியையும் தெரிவித்தார். அதோடு, பாகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்” என கூறப்பட்டுள்ளது.
காத்திருப்பில் சிக்கிய ஷெரீஃப்: அமெரிக்க நேரப்படி மாலை 5 மணியளவில் ஷெரீஃப் மற்றும் அசிம் முனிர் வெள்ளை மாளிகை சென்றடைந்தனர். மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். ஆனால் டிரம்ப் அலுவலகப் பணியில் இருந்ததால், இருவரும் காத்திருக்க வேண்டியதாக அமைந்தது. எவ்வளவு நேரம் காத்திருக்க வைத்தனர் என்பது தெளிவில்லை. இருந்தாலும் சுமார் அரைமணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை, புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.