லடாக் போராட்டம்: சோனம் வாங்சுக் கைது – தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

லடாக் பகுதியுக்கு மாநில அந்தஸ்து கோரி போராடி வந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வன்முறைக்கு தூண்டியதாகக் குற்றம் சாட்டி அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதோடு, வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடியினரின் மொழி, கலாச்சாரம், பாரம்பரியம், பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார உரிமைகளை காக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 6-வது அட்டவணையில் லடாக்கைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியும், சோனம் வாங்சுக் கடந்த இரு வாரங்களாக உண்ணாவிரதத்தில் இருந்தார்.

இந்நிலையில், அவரது போராட்டத்துக்கு ஆதரவாக ‘லே அபெக்ஸ் பாடி’ அமைப்பின் இளைஞர் பிரிவு முழுமையான அடைப்பு போராட்ட அழைப்பு விடுத்தது. ஆனால் அது வன்முறையாக மாறியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்; 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வன்முறைக்கு சோனம் வாங்சுக்கின் உரைகள் தான் காரணம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. அதற்கு பதிலளித்த வாங்சுக்,

“என்னை அரசியல் பலிகடாவாக காட்ட முயற்சிக்கின்றனர். என்னை கைது செய்து இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர். நான் கைது செய்யப்படுவதற்கு தயார். ஆனால், என்னைக் கைது செய்வது அரசுக்கு கூடுதல் சிக்கல்களையே ஏற்படுத்தும். பிரச்சினைக்கு என்னையோ அல்லது காங்கிரஸையோ குறை சொல்வதை விடுத்து அதன் வேரை கண்டறிந்து தீர்வு காண வேண்டும். பழிபோடும் அரசியல் எப்போதும் பலனளிக்காது; புத்திசாலித்தனமே தேவை. இளைஞர்கள் ஏற்கெனவே விரக்தியடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாங்சுக் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா அல்லது வேறு ரகசிய இடத்துக்கா அழைத்துச் செல்லப்படுவாரா என்ற தகவல் வெளியாகவில்லை.

சிபிஐ விசாரணை:

இதேவேளை, சோனம் வாங்சுக் தொடங்கிய ஹிமாலயன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆல்டர்நேட்டிவ்ஸ் லடாக் என்ற நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வாங்சுக் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி பாகிஸ்தான் சென்றதாகவும் தகவல் உள்ளது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர்.

மேலும், சோனம் வாங்சுக் தலைமையிலான லடாக் கல்வி மற்றும் கலாச்சார இயக்கத்துக்கு வழங்கப்பட்டிருந்த வெளிநாட்டு நன்கொடை (FCRA) அனுமதியையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

Facebook Comments Box