நாடு தழுவிய பிஎஸ்என்எல் 4ஜி சேவை: பிரதமர் மோடி அறிமுகம்

ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் 4ஜி வலைப்பின்னல் சேவையை தொடங்கி வைத்தார். இதன் மூலம் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கவுள்ளது.

புதிய 4ஜி தொழில்நுட்பத்துடன் 92,600 கோபுரங்கள் உட்பட, மொத்தம் 97,500-க்கும் அதிகமான பிஎஸ்என்எல் செல்போன் கோபுரங்களின் செயல்பாட்டையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். ரூ.37,000 கோடி செலவில், முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு அமைக்கப்பட்ட இக்கோபுரங்கள், சூரிய சக்தி மூலமாக இயங்கும் என்பதும் சிறப்பம்சமாகும்.

நாடு முழுவதும் டிஜிட்டல் இணைப்பை விரிவுபடுத்தவும், குறிப்பாக கிராமப்புறங்களுக்கு தரமான டிஜிட்டல் சேவையை வழங்கவும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை முக்கிய பங்கு வகிக்கும் என தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட புது பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் 4ஜி வசதியை பெற உள்ளனர்.

இதுவரை இணைய வசதி எட்டாத 26,700-க்கும் மேலான கிராமங்களுக்கு 4ஜி மூலம் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதில் ஒடிசா மாநிலத்தின் 2,472 கிராமங்களும் அடங்கும். அவற்றில் பல தொலைதூர மற்றும் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ளன.

4ஜி சேவையை துவக்கி வைத்த பிரதமர் மோடி, “வரும் ஆண்டுகளில் ஒடிசா விரைவாக வளம்பெறும். இயற்கை வளங்கள் நிரம்பிய ஒடிசா இனி பின்தங்கிய மாநிலமாக இருக்காது,” என்றார்.

Facebook Comments Box