திருப்பதி பிரம்மோற்சவம் 6-ம் நாள் விழா: ஹனுமன் வாகனத்தில் மலையப்பர் திருவீதி உலா
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று, காலை ஹனுமன் வாகனத்தில், மாலை தங்க ரதத்தில், இரவு கஜ வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவ விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 6-ம் நாளான நேற்று காலை ஹனுமன் வாகனத்தில் கோதண்டராமர் அலங்காரத்தில் மலையப்பர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் 20 மாநிலங்களுக்கும் மேலான நடனக் கலைஞர்கள் மாட வீதிகளில் நடனமாடினர். ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், வாரி சேவகர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்.
மாலை 4 மணிக்கு தங்க ரதத்தில் மலையப்பர் எழுந்தருளினார். பெண்கள் வடம் பிடித்து ரதத்தை இழுத்தனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த வாகன சேவையில் திரளான பக்தர்கள் மலையப்பரை வழிபட்டனர்.
இரவு 7 மணியில் கஜ வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளி, 9 மணிவரை பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளில் இன்று காலை சூரிய பிரபை மற்றும் இரவு சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பர் பவனிவந்து அருள் பகிர்வார்.
மேலும், நேற்று மாலை தங்க தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் தேரை இழுத்து பங்கேற்றனர். இந்த தங்கத் தேரை உருவாக்கப்பட்டு இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.