‘மும்பை தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க நினைத்தேன், ஆனால்…’ – ப. சிதம்பரம்

2008 ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, அதற்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருந்தது. ஆனால் சர்வதேச அழுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அது நடைமுறைப்படவில்லை என்று முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

“2008 நவம்பர் 26 அன்று தொடங்கி மூன்று நாட்கள் நீடித்த மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட கடைசி பயங்கரவாதியும் சுட்டு வீழ்த்தப்பட்ட பின், அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் ராஜினாமா செய்தார். அப்போது நான் நிதி அமைச்சராக இருந்தேன். பின்னர், பிரதமர் மன்மோகன் சிங் என்னை அழைத்து, உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள் என தெரிவித்தார்.

எனக்கு அந்தப் பொறுப்பு ஏற்க தயக்கம் இருந்தது. நிதி அமைச்சராகவே தொடர விரும்பினேன். ஆனால், பிரதமர் இது கட்சியின் முடிவு என்பதால் ஏற்க வேண்டும் எனக் கூறினார். அதன் பிறகு, உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றேன்.

அதன்பின், மும்பை தாக்குதலுக்குப் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று நான் கருதினேன். இதைப் பிரதமர் உட்பட அதிகாரிகளிடம் தெரிவித்தேன். ஆனால், பதிலடி கொடுக்க வேண்டாம் என்பது அரசின் ஒருமித்த முடிவாக அமைந்தது. பாகிஸ்தான் மீது நேரடித் தாக்குதல் நடத்துவது சரியல்ல என்று வெளியுறவு அமைச்சகம் பரிந்துரைத்தது. மேலும், அமெரிக்க வெளியுறவு செயலர் கான்டலீசா ரைஸ் இந்தியா வந்தும், பிரதமரையும் என்னையும் சந்தித்து, தயவு செய்து பதிலடி கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அந்த அழுத்தங்களின் காரணமாக பதிலடி திட்டம் கைவிடப்பட்டது.”

பயங்கரவாதத்துக்கு எதிராக காங்கிரஸ் அரசு மென்மையாக நடந்துகொண்டது என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த சிதம்பரம்,

“அது தவறு. அரசு பலம் மற்றும் பலவீனங்களை மதித்து எடுக்கப்பட்ட தீர்மானம் தான் அது. நான் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தாலும், அரசின் முடிவை ஏற்க வேண்டியிருந்தது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இன்றைய அரசு எடுத்த நடவடிக்கையை, 2008 சூழலுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் இடையில் 17 ஆண்டுகள் கழிந்துவிட்டன. அந்த காலத்தில் ராணுவத்தின் தயார் நிலை உள்ளிட்ட பல அம்சங்கள் மாறிவிட்டன” என்று தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு பாஜக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

Facebook Comments Box