ஆந்திராவில் 7 கிலோ தங்கம், 5 கோடி ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்
தசரா பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 7 கிலோ தங்கம், ரூ.5 கோடி நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்து வழிபட்டனர். ஆந்திர மாநிலத்தில் தசரா பண்டிகையை மக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அம்மன் கோயில்களில் பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் அமலாபுரம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு ரூ.4.41 கோடி நோட்டுகளால் மகாலட்சுமி அலங்காரம் செய்திருந்தனர். விசாகப்பட்டினம், குருபோம் மார்க்கெட் பகுதியில் 148 ஆண்டுகள் பழமையான கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இக்கோயில் அம்மனுக்கு 7 கிலோ தங்க ஆபரணங்கள், 12 கிலோ வெள்ளி ஆபரணங்கள், ரூ.5 கோடி மதிப்பிலான கரன்சி நோட்டுகளால் மகாலட்சுமி அலங்காரம் செய்திருந்தனர். மேலும் 250 பெண்கள் மூலம் கோடி குங்குமார்ச்சனை நடத்தினர். சுற்றுவட்டாரத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.