குலசேகரன்பட்டினம்: தசரா திருவிழாவில் மகிஷாசூர சம்ஹாரம் இன்று நள்ளிரவு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்-ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் தசரா பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசூர சம்ஹாரம் இன்று (அக்.2) நள்ளிரவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

செப்.23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில், தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. விழா நாட்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று நள்ளிரவு 12 மணிக்கு, அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பு எழுந்தருளி மகிஷாசூரனை சம்ஹாரம் செய்வார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக, அக்டோபர் 3-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடையில், 2 மணிக்கு சிதம்பரேஸ்வரர் கோயிலில், 5 மணிக்கு கோயில் கலையரங்கில் அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபெறும். காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் வீதியுலா புறப்படுவார். மாலை 4 மணிக்கு சப்பரம் கோயிலில் வந்து சேர்ந்ததும் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் பக்தர்கள் காப்பு அவிழ்த்து விரத நிறைவு செய்கிறார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகமும் நடைபெறும்.

இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வி, செயல் அலுவலர் வள்ளிநாயகம், அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் மற்றும் கோயில் பணியாளர்கள் ஒருங்கிணைத்து வருகின்றனர்.

Facebook Comments Box