இருமல் மருந்துகளால் குழந்தைகள் இறக்கவில்லை: ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் விளக்கம்
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 11 குழந்தைகள் இருமல் மருந்துகளால் உயிரிழந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு ராஜஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங் கின்ஸ்வர், “இறந்த குழந்தைகள் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர்; அரசு வழங்கிய மருந்துகளால் உயிரிழக்கவில்லை,” என்று விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது:
“இருமல் மருந்துகளால் எந்தக் குழந்தையும் இறக்கவில்லை. ஒருவருக்கு மூளைக்காய்ச்சல், மற்றொருவருக்கு சுவாசத் தொற்று இருந்தது. மருந்துகள் பரிசோதிக்கப்பட்டு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு வழங்கிய மருந்துகளில் தரக்குறைவு இல்லை.”
அமைச்சர் மேலும் கூறினார்:
“பெரியவர்களுக்கான மருந்துகள் சிறு குழந்தைகளுக்கு கொடுக்கப்படுவது ஆபத்தானது. அதனால்தான் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் பொருத்தமானதா என்பதைத் தெளிவாகக் குறிப்பிடும் புதிய முறையை அறிமுகப்படுத்துகிறோம். அரசின் தரப்பில் எந்த அலட்சியமும் இல்லை. எங்கள் மருத்துவர்கள் அந்த மருந்தை பரிந்துரைக்கவில்லை,” என்றார்.
அவரது கூற்றுப்படி, மருந்துகள் நான்கு முறை சோதிக்கப்பட்டு பாதுகாப்பானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சந்தேகம் எழுந்துள்ள இடங்களில் மீண்டும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், ராஜஸ்தானில் மூன்று குழந்தைகள் ‘கதிமான்’ (Gatiman) இருமல் சிரப்பை உட்கொண்ட பிறகு இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அரசு அந்த மருந்தை செப்டம்பர் 28 அன்று தடை செய்தது.
மேலும், மருந்து சோதனை மற்றும் விநியோகத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டதால், மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளர் ராஜாராம் சர்மா பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஜெய்ப்பூரை தளமாகக் கொண்ட கேசன்ஸ் பார்மா தயாரித்த 19 மருந்துகளும், டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் கொண்ட அனைத்து சிரப்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் பஜன்லால் சர்மா இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டு, நிபுணர் குழுவையும் நியமித்துள்ளார்.