தங்கம் விலை 2-வது முறையாக உயர்வு: ஒரு பவுன் ரூ.89,000 – புதிய வரலாற்று உச்சம்!

சென்னையில் இன்று (அக்டோபர் 6) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,125 ஆகவும், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.89,000 ஆகவும் எட்டியுள்ளது. இது இதுவரை இல்லாத வரலாற்று உச்சமாகும்.

தங்கத்தின் விலை சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, மற்றும் புவிசார் அரசியல் மோதல்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்தது, ரூபாய் மதிப்பு சரிவு, உக்ரைன்–ரஷ்யா போர், இஸ்ரேல்–ஹமாஸ் மோதல் போன்ற காரணிகள் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தங்கம் ஒரு பவுன் ரூ.87,600 என்ற உச்சத்தை எட்டியிருந்தது. இன்று காலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ரூ.11,060-க்கு விற்பனையாகி, பவுனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.88,480 ஆகியது. அதேபோல் வெள்ளியும் ரூ.1 உயர்ந்து கிராமுக்கு ரூ.166, கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,66,000 என உயர்ந்தது.

இந்நிலையில், மாலை நேரத்தில் தங்கம் மீண்டும் ரூ.65 உயர்ந்து கிராமுக்கு ரூ.11,125 ஆக, பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.89,000 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வெள்ளியும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.167-க்கு விற்பனையாகிறது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தாறுமாறாகக் குறைந்ததே, தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மீண்டும் ஏற்றம் காணக் காரணமாகியுள்ளது.

🔸 இன்றைய விலை நிலவரம் (அக்டோபர் 6):

  • தங்கம் (22 காரட்): ₹11,125 / கிராம்
  • தங்கம் (பவுன்): ₹89,000
  • வெள்ளி: ₹167 / கிராம், ₹1,67,000 / கிலோ

பண்டிகை காலம் நெருங்கும் நிலையில், தங்கத்தின் இந்த விலை உயர்வு நகைத் துறையிலும் நுகர்வோரிடையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments Box