உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு எதிராக நடந்த செயல் வெட்கக்கேடானது: முதல்வர் ஸ்டாலின்

“உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு எதிராக நடந்த செயல், நமது ஜனநாயகத்தின் மிக உயர்ந்த நீதித்துறை அலுவலகத்தின் மீதான தாக்குதலாகும்” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு எதிராக நடந்த செயல், நமது ஜனநாயகத்தின் மிக உயர்ந்த நீதித்துறை அலுவலகத்தை குறைக்கும் தாக்குதலாகும். இது வெட்கக்கேடானது மற்றும் கடுமையாக கண்டிக்கப்படவேண்டியது. இந்தச் சம்பவத்தில் தலைமை நீதிபதி கருணை, அமைதி மற்றும் பெருந்தன்மையுடன் பதிலளித்த விதம், அந்த நிறுவத்தின் வலிமையை காட்டுகிறது.

ஆனால் இதை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. தாக்குதல் நடத்தியவர் இதற்கான காரணத்தை வெளிப்படுத்தியிருப்பதால், நமது சமூகத்தில் அடக்குமுறை, ஏற்றத்தாழ்வு மனநிலை எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. நமது அமைப்புகளை மதித்து பாதுகாக்கும் வகையில் நமது நடத்தையில் முதிர்ச்சியைக் காட்டும் கலாச்சாரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

நடந்தது என்ன? – உச்ச நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வழக்கின் விசாரணையை தொடங்கியபோது, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் அவர் மீது காலணியை வீச முயன்றார். ஆனால் அமர்வு முன்னாலேயே காலணி விழுந்தது. இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ராகேஷ் கிஷோர் உடனடியாக நீதிமன்ற அறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது, “சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது” என்று அவர் கூச்சலிட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். தலைமை நீதிபதி கவாய் அமைதியாக இருக்க, இடையூறு இல்லாமல் நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தார். மேலும், “இதனால் விசாரணை திசைதிருப்பப்படக் கூடாது. இவை என்னைப் பாதிக்காது, விசாரணையை தொடருங்கள்” என்று கூறினார்.

இதன்பிறகு, இச்சம்பவம் தொடர்பாக பொதுச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு பொறுப்பாளர் உள்ளிட்ட நீதிமன்ற அதிகாரிகளுடன் கவாய் ஆலோசனை நடத்தினார். விசாரணையில் தெரிந்ததாவது, ராகேஷ் கிஷோர் 2011 முதல் வழக்கறிஞர் சங்க உறுப்பினராக உள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் சேதமடைந்த விஷ்ணு சிலையை மீட்டெடுப்பது தொடர்பான தலைமை நீதிபதியின் கருத்துக்கு எதிராக அவர் இப்படிச் செயலில் ஈடுபட்டுள்ளார். செப்டம்பரில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜவாரி கோயிலில் உள்ள 7 அடி விஷ்ணு சிலையை மீட்டெடுக்க மனு தாக்கல் செய்ததை தலைமை நீதிபதி கவாய் நிராகரித்தார். அவர் மனுதாரரிடம், “இது முற்றிலும் விளம்பர நோக்கம் கொண்ட வழக்கு. போய் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால் இப்போதே சென்று பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறியதாகவும் தெரிந்தது.

இந்த கருத்துக்கு சமூக ஊடகங்களில் பரவலான விமர்சனங்கள் எழுந்து, கவாய் தனது கருத்துக்கள் தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும் விளக்கம் அளித்தார்.

Facebook Comments Box