சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் வீடு அருகே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அவரது கழுத்து மற்றும் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உட்பட பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 6 தனிப்படைகள் அமைத்து பகுஜன் சமாஜ் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றுவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரண் அடைந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொன்றதாக அண்ணாநகர் துணை கமிஷனர் முன் ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உட்பட 8 பேர் சரண் அடைந்தனர். சரணடைந்த 8 பேரையும் போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்த அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி இன்று தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாயாவதி, அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தவும், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் இன்று சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.