துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.40 லட்சம் விபத்து காப்பீடு – உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
உத்தரபிரதேசத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.40 லட்சம் வரை விபத்து காப்பீடு வழங்கப்படும் என மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் துப்புரவு பணிகளில் பெரும்பாலானோர் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், லக்னோவில் பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் மகாசபா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மகரிஷி வால்மீகி பிரகத் திவஸ் நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் கூறியதாவது:
“வால்மீகி பகவானை அவமதிப்பது ராமரை அவமதிப்பதற்கு சமம். எதிர்க்கட்சிகள் வால்மீகி சமூகத்தை சாதி அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றன. இதிலிருந்து தப்பிக்க அந்த சமூகத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். வால்மீகி சமூகத்தினருக்குக் கிடைக்கும் மரியாதை, மகரிஷி வால்மீகி அவர்களுக்குச் செய்யப்படும் மரியாதையாகும்.”
அவர் மேலும் தெரிவித்தது:
“உத்தரபிரதேசத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் பணியின் போது விபத்துக்குள்ளானால், அவர்களின் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் வழங்கும் வகையில் காப்பீடு திட்டம் அமுல்படுத்தப்படும். இந்த நிதி அவுட்சோர்சிங் நிறுவனங்கள் மூலம் அல்ல, அரசு நிறுவனத்தின் வாயிலாக வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 80,000 தொழிலாளர்கள் பயன் பெறுவர்.”
யோகி ஆதித்யநாத் மேலும் கூறியதாவது:
“ராமாயணத்தில் ராமர் தான் உண்மையான மதம் என்று வால்மீகி கூறியுள்ளார். மனித சமூகம் மகரிஷி வால்மீகிக்கு நன்றி செலுத்த வேண்டும். ஒவ்வொரு இல்லத்திலும் மகரிஷி வால்மீகியின் படம் இருக்க வேண்டும். ராமாயண யுகத்தில் மகரிஷி வால்மீகி, மகாபாரத யுகத்தில் வேத வியாசர், இடைக்காலத்தில் சத்குரு ரவிதாஸ், சுதந்திரப் போராட்ட காலத்தில் பாபா சாகேப் அம்பேத்கர் ஆகியோர் சமூகத்தை வழிநடத்தினர்.”
மேலும், அவர் குற்றம் சாட்டியதாவது:
“வாக்கு வங்கி அரசியல் என்ற பெயரில் சில கட்சிகள் சாதி சார்ந்த ஆதரவை நாடுகின்றன. 2012-ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தபோது, சமூக நீதி முன்னோடிகளின் நினைவுச்சின்னங்கள் இடிக்கப்படும் என்ற அச்சம் எழுந்தது. கன்னோஜ் மருத்துவக் கல்லூரியின் பெயரில் இருந்த ‘பாபா சாகேப்’ நீக்கப்பட்டது; லக்னோ பல்கலைக்கழகத்தில் சூட்டப்பட்டிருந்த கன்ஷி ராம் பெயரும் மாற்றப்பட்டது.”
இவ்வாறு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.