பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 22-ம் தேதி தொடக்கம்

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா வரும் அக்டோபர் 22-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் ஆரம்பமாகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் விழா நண்பகல் 12 மணிக்கு உச்சிகாலத்தில் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக்டோபர் 27-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.

அந்த நாளில் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். மாலை 5.30 மணிக்கு நடக்கவிருந்த சாயரட்சை பூஜை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும். பிற்பகல் 3 மணிக்கு சின்னக்குமாரசுவாமி அசுரர்களை வதம்புரிய, மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சியுடன் சந்நிதி அடைக்கப்படும்.

பிறகு, திருஆவினன்குடி கோயிலில் பராசக்தி வேலுக்கு பூஜை நடைபெற்று, மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதம், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்சூரன் வதம், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதம், மேற்கு ரதவீதியில் சூரபத்மன் வதம் நடைபெற உள்ளது.

அடுத்த நாள், அக்டோபர் 28-ம் தேதி மலைக்கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சண்முகருக்கும், பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி தேவசேனாசமேத முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.

Facebook Comments Box