அரசு தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள்: பிரதமர் மோடிக்கு இபிஎஸ் வாழ்த்து
அரசு தலைமைப் பதவிகளில் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் பணியாற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வராகவும், பின்னர் பிரதமராகவும் 25 ஆண்டுகள் அரசின் தலைமைப் பதவியில் இருந்து வருகிறார். இதற்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
“25 ஆண்டுகளாக அரசின் தலைவராக பதவி வகித்து வரலாற்றுச் சாதனை படைத்த பிரதமர் மோடிக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த இணையற்ற மைல்கல், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அரசியல் திறமை மற்றும் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், தேசத்திற்கு நேர்மையுடன் சேவை செய்வதற்கும் உள்ள அர்ப்பணிப்புக்கு சான்றாகும்.”
பிரதமர் மோடி கடந்த 2001 அக்டோபர் 7-ம் தேதி குஜராத் முதல்வராக முதல் முறையாக தலைமைப் பதவியை ஏற்றார். தொடர்ந்து 3 முறை குஜராத் முதல்வராக இருந்த அவர் 2014-ல் பிரதமராக ஆனார். அதன் பிறகு 3 முறையாக பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்கிறார். இதனால் அவர் அரசின் தலைமைப் பதவியில் 25-வது ஆண்டை தொடங்கியுள்ளார்.
இத தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியதாவது:
“2001 ஆம் ஆண்டு இந்த நாளில் நான் குஜராத்தின் முதல்வராக பதவியேற்றேன். என் சக இந்தியர்களின் தொடர்ச்சியான ஆசீர்வாதங்களுக்கு நன்றி. இன்று நான் அரசின் தலைவராக 25-வது ஆண்டில் நுழைகிறேன். இந்திய மக்களுக்கு எனது நன்றி. இத்தனை ஆண்டுகளாக நமது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும் நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்.”