ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்திய இளைஞர் உக்ரைன் படைகளிடம் சரணடைந்தார்

ரஷ்ய ராணுவத்துக்காக போரில் ஈடுபட்டிருந்த ஒரு இந்தியர், உக்ரைன் படைகளிடம் சரணடைந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ராணுவத்தின் 63வது படைப்பிரிவு தனது டெலிகிராம் சேனலில், குஜராத்தைச் சேர்ந்த மஜோதி சாஹில் முகமது ஹுசைன் என்ற இந்தியர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு வீடியோவை வெளியிட்டது. எனினும், இதுகுறித்து இந்திய அதிகாரிகள் எந்த உறுதிப்படுத்தலும் இதுவரை வழங்கவில்லை.

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்ததாவது: “இந்த தகவலின் உண்மைத்தன்மை தற்போது சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உக்ரைன் அதிகாரிகளிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.”

உக்ரைன் செய்தித்தாள் தி கீவ் இன்டிபென்டன்ட் தெரிவித்ததன்படி, 22 வயதான மஜோதி சாஹில் முகமது ஹுசைன், பல்கலைக்கழகக் கல்விக்காக ரஷ்யாவிற்கு சென்றவர் என கூறப்படுகிறது.

அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:

“போதைப்பொருள் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் எனக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், தண்டனையைத் தவிர்க்க ரஷ்ய ராணுவத்துடன் ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது. நான் சிறையில் இருக்க விரும்பவில்லை என்பதால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்.

16 நாட்கள் பயிற்சிக்குப் பிறகு, அக்டோபர் 1ஆம் தேதி முதல் போர் பணிக்கு அனுப்பப்பட்டேன். போரின் போது சில கிலோமீட்டர் தூரத்தில் உக்ரைன் படைகளை கண்டேன். உடனே என் துப்பாக்கியை கீழே வைத்து, சண்டையிட விருப்பமில்லை என்று தெரிவித்தேன். எனக்கு உதவி தேவை; ரஷ்யாவிற்கு திரும்ப விரும்பவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம், ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றி வரும் 27 இந்தியர்களை விடுவிக்க இந்திய அரசு ரஷ்யாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதுவரை உக்ரைன் போரில் ரஷ்யாவுக்காக சண்டையிட்ட 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்; 96 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்; மேலும் 16 பேர் காணாமல் போனதாகப் பதிவாகியுள்ளது.

Facebook Comments Box