“பிரதமரைப் போல செயல்படும் அமித் ஷாவிடம் மோடிக்கு எச்சரிக்கை தேவை” – மம்தா பானர்ஜி

வடக்கு வங்காளத்தை வெள்ளம் பாதித்த பின்னர் திரும்பிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறியது:

“பாஜகவின் தலைவர் அமித் ஷா, வாக்காளர் பட்டியலில் பல லட்சம் பெயர்களை நீக்குவோம் என்ற நோக்கத்துடன் மேற்கு வங்கம் வந்தார். மேற்கு வங்கம் இயற்கை பேரழிவுகள், கனமழை போன்ற சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் முடிக்க முடியுமா?

தற்போதைய சூழ்நிலையில் புதிய பெயர்களை சேர்க்க முடிகிறதா? இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் உத்தரவின் அடிப்படையில் செயல்பட வேண்டுமா, அல்லது பொதுமக்களின் உரிமைகளுக்காக செயல்படவேண்டும்? இவை அனைத்தும் அமித் ஷாவின் விளையாட்டு. அவர் நாட்டின் செயல் பிரதமரைப் போல நடந்து வருகிறார். பிரதமர் மோடியும் இதனை அறிவார். எனினும் இதைச் சொல்வதில் வருத்தம் உண்டு.

அமித் ஷாவை எப்போதும் நம்பக்கூடாது என்று பிரதமருக்கு நான் தாழ்மையுடன் கூறுகிறேன். ஒரு நாள் அவர், உங்களுக்கு எதிராக 18-ம் நூற்றாண்டின் மீர் ஜாபர் போல மாறுவார். நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது. என் வாழ்க்கையில் பல மத்திய அரசுகளை பார்த்துள்ளேன். ஆனால், இதுபோன்ற திமிர்பிடித்த, சர்வாதிகார ஆட்சியை ஒருபோதும் பார்த்ததில்லை. பாஜக நாட்டை அழிக்கிறது.”

மீர் ஜாபர் யார்?

18-ம் நூற்றாண்டில் வங்கத்தின் ராணுவத் தளபதியாக இருந்தவர். பிளாசி போரில் நவாப் சிராஜ் உத் தவுலாவைக் காட்டிக் கொடுத்து, ஆங்கிலேயர்களின் உதவியுடன் அதிகாரம் கைப்பற்றியவர்.

Facebook Comments Box