அக்.22 முதல் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் தலைமையில் ஆலோசனை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறவுள்ள கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசும்போது கூறியதாவது:
“வரும் அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை கந்தசஷ்டி விழா நடைபெற உள்ளது. இதில், அக்டோபர் 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறும். இவ்விழாவில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார்.
பக்தர்களுக்காக தினமும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், நகரம் முழுவதும் குப்பை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். கோயில் வளாகத்திலும் கடற்கரைப் பகுதிகளிலும் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் மாடுகளை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
திருவிழாவை முன்னிட்டு சுமார் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் நெல்லையில் இருந்து 60, தூத்துக்குடியில் இருந்து 40, மதுரையில் இருந்து 60, ராஜபாளையத்தில் இருந்து 15 பேருந்துகள் உட்பட பல மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் திருச்செந்தூர் ஐ.டி.ஐ வளாகத்தில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
பக்தர்கள் கடலில் நீராடும்போது பாதுகாப்பு வழங்க கடலோர காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை இணைந்து 5 படகுகள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளும். செல்போன் தொடர்பு சீராக இயங்க 6 நிரந்தர கோபுரங்களுடன் கூடுதலாக 2 நகரும் கோபுரங்கள் நிறுவப்படுகின்றன.
விழா நாட்களில் பக்தர்களுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல், அவசர மருந்துகள் வழங்கப்படும். 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்கும். தீயணைப்பு துறை சார்பில் 7 வாகனங்கள், 40 கமாண்டோ வீரர்கள், மேலும் கோயில் பாதுகாப்புக்காக 144 தனியார் காவலர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.
காவல் துறை சார்பில் சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விழா காலத்தில் அனைத்து தெருவிளக்குகளும் இயங்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், துறை அதிகாரிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்றும் ஆட்சியர் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் கவுதம், கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.