அமைதியாக இருங்கள்… நாளை சென்னை வருகிறேன்… ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நடுவே மாயாவதி பதிவு

0

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நாளை சென்னை வருவதாக அறிவித்துள்ளார். இதனிடையே சென்னையில் பதற்றம் நிலவுகிறது. பல இடங்களில் போராட்டங்கள் நடக்கும் சூழலில் அனைவரும் அமைதியாக நடந்து சட்டம் ஒழுங்கை மதித்து நடக்க வேண்டும் என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக ஆம்ஸ்ட்ராங் உள்ளார். 52 வயதான இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். நேற்று மாலை அவர் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிவிட்டு வேகமாக சென்றது.

ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடினார். இதையடுத்து நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலையைக் கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் அவரது உறவினர்கள் சென்னையில் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 8 பேர் போலீசில் சரண் அடைந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், எதிர்க்கட்சித் தலைவர்களான எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலைச் செய்தி கேட்டு மாயாவதியும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டின் அருகே கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்கு உரியது. வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங், தமிழகத்தில் தலித்துகளுக்காகக் குரல் கொடுத்து வரும் தலைவர். ஆம்ஸ்ட்ராங்கை கொன்ற குற்றவாளிகளை தமிழக அரசு தண்டிக்க வேண்டும்,” என்றார்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் மாயாவதி இன்று சென்னை வரவுள்ளதாக காலையில் தகவல் வெளியானது. இந்நிலையில் மாயாவதியின் பயணம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. மாயாவதி இன்று சென்னை வரவில்லை. நாளை அவர் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் கடின உழைப்பாளி மற்றும் அர்ப்பணிப்புள்ள மாநிலக் கட்சித் தலைவரான ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை அவரது சென்னை இல்லத்திற்கு வெளியே கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மிகவும் சோகமான மற்றும் கவலையளிக்கும் இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்தவும், துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினரை சந்திக்கவும் நாளை காலை சென்னைக்கு வர திட்டமிட்டுள்ளேன். அமைதியை நிலைநாட்டவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் அனைவரும் செயல்பட வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here