ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை இந்த படுகொலை காட்டுகிறது என பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி தமிழக அரசு மீது குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெரம்பூரில் வைக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி சென்னைக்கு நேரில் வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர், அவரது மனைவி உள்ளிட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
முன்னதாக ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாயாவதி, தமிழக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது குறித்து, மாயாவதி கூறியதாவது: அம்பேத்கர் கொள்கையுடன் கட்சியில் ஆம்ஸ்ட்ராங் தீவிரமாக செயல்பட்டார். ஆம்ஸ்ட்ராங் படுகொலையால் எங்கள் கட்சி மிகுந்த வருத்தமும், வருத்தமும் அடைந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை ஆம்ஸ்ட்ராங் படுகொலை காட்டுகிறது. அவரது படுகொலை வழக்கை சிபிஐ வசம் மாநில அரசு ஒப்படைக்க வேண்டும். தொண்டர்கள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது. நிதானமாக கருத்துகளை தெரிவிக்கவும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு எங்கள் கட்சி எப்போதும் துணை நிற்கும்.
ஆம்ஸ்ட்ராங் கட்சியின் செயல்பாடுகளை முன்னின்று நடத்துவது போல, மற்ற நண்பர்களும் தலித் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபட வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன். தலித் மக்களுக்கு வழக்கு விவகாரங்களில் உதவினார். பொருளாதார ரீதியாகவும் ஆதரவளித்தார். இந்த நேரத்தில், ஊடகங்கள் மூலம் தமிழக அரசுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்,” என்றார்.