வடகொரியாவில் கிம் ஜாங் உன் அதிபராக இருப்பதால், அங்கு சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில், தென்கொரிய நாடகங்களை பார்த்த 30 குழந்தைகளுக்கு வடகொரியா மரண தண்டனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிம் ஜாங் ஏன் இவ்வளவு கடுமையான தண்டனைகளை வழங்குகிறார் என்று பார்ப்போம்.
உலகில் இன்னும் சர்வாதிகார ஆட்சியில் இருக்கும் சில நாடுகளில் வடகொரியாவும் ஒன்று. அங்கு கிம் ஜாங் உன் அதிபராக இருந்துள்ளார். முதலில் அவரது தந்தை அதிபர், இப்போது கிம் ஜாங் அதிபர்.
உலக நாடுகளுடன் வடகொரியாவுக்கு எந்த தொடர்பும் இல்லை. இதன் விளைவாக, உலகின் பிற பகுதிகளில் என்ன நடக்கிறது என்று வட கொரியர்களுக்கு தெரியாது. வடகொரியா ஊடகங்களில் தொடங்கி எல்லாவற்றிலும் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது.
30 குழந்தைகளுக்கு மரண தண்டனை: இதனிடையே, தென் கொரிய நாடகங்களைப் பார்த்த 30 குழந்தைகளுக்கு வடகொரியா மரண தண்டனை விதித்துள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரியா அதன் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு புகழ்பெற்றது என்றாலும், வட கொரியா ஒரு சர்வாதிகார நாடாகவே உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் தென் கொரியாவை முக்கிய எதிரியாக அறிவித்தார். தென் கொரியா மீது வடகொரியா கடும் கோபத்தில் உள்ளது. இதனால் தென்கொரியாவுக்கு எதிராக வடகொரியா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தென் கொரியா தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் வடகொரியா தடை விதித்துள்ளது.
தென் கொரிய சீரியல்கள்: குறிப்பாக தென் கொரிய சீரியல்கள் வட கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த கே-டிராமாக்கள் வட கொரியாவில் ஒளிபரப்பப்படுவதில்லை.. அதையும் தாண்டி இந்த தொடர்கள் பென் டிரைவ்கள் மூலம் வடகொரியாவிற்குள் கடத்தப்படுகின்றன. இதனை வடகொரியாவில் உள்ள இளைஞர்கள் அதிகம் பார்ப்பதாக கூறப்படுகிறது.
மரண தண்டனை: இதற்கிடையில், தடைசெய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்ததற்காக வட கொரிய அதிகாரிகள் 30 நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “30 பேருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளனர். இதை ஏற்க முடியாது. 3 சட்டங்களின் அடிப்படையில் இந்த மரண தண்டனையை விதித்துள்ளனர்” என்றார்.
சிறிய குற்றங்களுக்கு வடகொரியா மரண தண்டனை விதிப்பது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் வடகொரிய இளைஞர்கள் தொலைக்காட்சி பார்ப்பதற்காக கூட தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையான தண்டனை: வடகொரிய அரசு கடந்த சில ஆண்டுகளாக தண்டனைகளை கடுமையாக்கி வருகிறது. முன்னதாக, குற்றமிழைத்த இளைஞர்கள் சிறைகளுக்குப் பதிலாக தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் தண்டனை ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக இருக்கும். ஆனால் இப்போது, 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் மரண தண்டனை வரையிலான தண்டனைகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஏன்: கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், உலகின் பிற பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை வட கொரியர்கள் இப்போது அறிந்திருக்கிறார்கள். கிம் என்னதான் செய்தாலும் தனக்கு எதிராக மக்கள் திரளக்கூடாது என்பதற்காகவும், அரசுக்கு பயந்து விடக்கூடாது என்பதற்காகவும் இதுபோன்ற கடுமையான தண்டனைகளை விதித்து வருகிறார்.