பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 50மீ (3பி) ரைபிள் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்றார். பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் மூன்றாவது வெண்கலப் பதக்கம் இதுவாகும்.
50 மீட்டர் ரைபிள் 3 நிலைகளுக்கான இறுதிச் சுற்றில், ஸ்வப்னில் குசலே வெண்கலம் வென்றார். அவர் 451.4 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். சீனாவின் ஒய்.கே. லு 463.6 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். உக்ரைனின் குலிஷ் 461 புள்ளிகளுடன் வெள்ளி வென்றார்.
ஸ்வப்னில் குசலேவின் சிறப்பான சாதனை, இந்தியாவை பெருமைப்படுத்தியது மட்டுமின்றி, துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் அவரது நிபுணத்துவத்தையும் உயர்த்தி உள்ளது. இதற்கிடையில், துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலம் வென்ற தனது மகனுக்கு ஸ்வப்னிலின் தந்தை வாழ்த்து தெரிவித்தார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் மனு பாகர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். அதன்பின், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் மனு பக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது. பதக்க பட்டியலில் இந்தியா தற்போது 41வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 26ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிரான்ஸ் முழுவதும் 30க்கும் மேற்பட்ட மையங்களில் பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.