ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்
அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தை ஆளும் ஹமாஸ் திடீரென இஸ்ரேல் மீது படையெடுத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
இதையடுத்து ஹமாஸ் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பின் கோட்டையான காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 38 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஹமாஸுக்கு ஆதரவாக லெபனான், ஈரான், சிரியா போன்ற நாடுகள் செயல்பட்டு வருகின்றன. முக்கிய ஹமாஸ் தலைவர்கள் நிதி திரட்டி துருப்புக்களுக்கு பயிற்சி அளிப்பதாக இஸ்ரேல் நம்புகிறது.
இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர் தங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹமாஸின் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஈரானில் வசித்து வந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார்.
ஈரானில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே (வயது 62) என்பவரின் உடல் கத்தாரில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்காக தலைநகர் தோஹாவில் உள்ள அப்துல்-அல் வஹாப் மசூதியில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று ஹனியேவுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானியும் கலந்து கொண்டார்.
கூடுதலாக, இறுதிச் சடங்கில் ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவராக இஸ்மாயில் ஹனியேவுக்குப் பின் வருவார் என்று கூறப்படும் நெருங்கிய உதவியாளரான காலித் மிஷால் மற்றும் ஹமாஸைப் போன்ற மற்றொரு பாலஸ்தீனிய போராளிக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் தலைவர் கலீல் அல்-ஹய்யா ஆகியோர் கலந்து கொண்டனர். .