உலக அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் சவாலாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக லாவோஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, வியன்டியானில் நடைபெற்ற 19வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பிலிப்பைன்சில் யாகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். ஆசியான் ஒற்றுமையை இந்தியா எப்போதும் ஆதரித்து வருகிறது, என்றார்.
மியான்மரில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மோதல்கள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார். ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட இந்தியா விரும்புவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
இதையடுத்து லாவோஸ் பிரதமர் சோனெக்ஸ் சிபாண்டனுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இரு தரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் பின்னர் தாய்லாந்து பிரதமர் படோங்டெர்ன் ஷினவத்ராவை பிரதமர் மோடி சந்தித்தார்.
முன்னதாக, கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி பிளின்கனை சந்தித்து பேசினார். அப்போது, அமெரிக்காவில் மில்டன் புயலால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.